மீண்டும் பரபரப்பில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்... பிஎச்டி மாணவர் தற்கொலை!
டெல்லி: அப்சல் குரு ஆதரவு கோஷம், மாணவர் தலைவர் கன்யா குமார் கைது உள்ளிட்டவற்றால் பெரும் போர்க்களமாக மாறிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அங்கு பிஎச்டி ஆய்வில் ஈடுபட்டு வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெயர் துஷ்யந்த். தெற்கு டெல்லியின் பேர் சராய் பகுதியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இன்று இவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
25 வயதான துஷ்யந்த், உ.பி மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் பிரேம்நாத்கூறுகையில், மாணவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதம் கிடைத்துள்ளது. அதில் குடும்பப் பிரச்சினை மற்றும் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகஅவர் எழுதி வைத்துள்ளார் என்று கூறினார்.
ஏற்கனவே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் தற்போது ஆய்வு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. இருப்பினும் இந்த மரணத்தில் சர்ச்சையான காரணம் ஏதும் இல்லை என்று போலீஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.