பிரியாணி சமைத்தது பெருங்குற்றமாம்.. மாணவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்த ஜேஎன்யூ பல்கலை
பல்கலைக்கழக வளாகத்துக்குள் பிரியாணி சமைத்தற்காக மாணவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது டெல்லி ஜேஎன்யூ கல்லூரி நிர்வாகம்.
டெல்லி: பல்கலைக்கழக வளாகத்துக்குள் பிரியாணி சமைத்தற்காக மாணவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது டெல்லி ஜேஎன்யூ கல்லூரி நிர்வாகம். இதன் காரணமாக அங்கு போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாக்கி இருக்கிறது.
பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திற்கு வெளியே இருக்கும் இடத்தில் மாணவர்கள் ஒன்றாக இணைந்து பிரியாணி சமைத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் ஒழுக்கத்தை மீறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மொத்தமாக நான்கு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது மாணவர்கள் பலர் போராட்டம் செய்யும் முடிவில் இறங்கி இருக்கின்றனர்.
புகார் அளிக்க சென்றனர்
கடந்த ஜூன் மாதம் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் மாணவத் தலைவர் மோஹித் பாண்டே என்ற மாணவரும், சத்ரூபா சக்ரவர்த்தி என்ற மனைவியும் இணைந்து அந்த கல்லூரியின் துணை வேந்தரை பார்க்க சென்று இருக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அவர்களை பார்க்காமல் பல மணி நேரம் காக்க வைத்து இருக்கிறார். காலையில் இருந்து இரவு வரை காக்க வைத்த அவர் நடுஇரவில் வேண்டுமானால் பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார். இதையடுத்து மாணவர்கள் அங்கு இருந்து வெளியானார்கள்.
பிரியாணி போராட்டம்
இந்த நிலையில் கோபமடைந்த மாணவர்கள் வெளியே வந்து வளாகத்தில் பிரியாணி சமைத்து இருக்கின்றனர். நான்கு பேர் சேர்ந்து ஒன்றாக சிக்கன் பிரியாணி சமைத்து அங்கேயே சாப்பிட்டு இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அங்கு வந்தவர்களுக்கும் பிரியாணியை பகிர்ந்து அளித்து இருக்கிறார்கள். தங்களது எதிர்ப்பை காட்டும்விதமாக அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
நால்வருக்கும் அபராதம்
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேருக்கும் தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் அபராதம் விதித்து இருக்கிறது. மோஹித் பாண்டே மற்றும் இரண்டு மாணவர்களுக்கு 6000 ரூபாய் அபாரதமும் சத்ரூபா சக்ரவர்த்தி என்ற மாணவிக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதித்து இருக்கின்றனர். மேலும் 10 நாட்களுக்குள் அபராத தொகையை கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பல்கலைக்கழகம் விளக்கம்
மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அபராதம் வழங்கும்படி ஒரு கடிதத்தை கொடுத்து இருக்கிறது. அதில் ''நீங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஒழுங்கை மீறிவிட்டிர்கள். இங்கு பிரியாணி சமைத்து சாப்பிடுவது பெரிய குற்றமாகும். அதனால் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது'' என்று எழுதப்பட்டு உள்ளது. ஆனால் பத்திக்கையாளர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருந்து யாரும் இதுகுறித்து பேச முன்வரவில்லை.