டெல்லி ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு.. காயமின்றி உயிர் தப்பினார்
டெல்லியில் ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.
டெல்லி: மத்திய டெல்லியில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் உமர் காலித் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் மற்றும் உமர் காலித் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கண்ணையா குமார் மற்ரு உமர் காலித் ஆகிய இருவர் மீதும் தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இதில் உமர் காலித் ஊடகங்களின் செய்திகள் மூலம் நன்கு அறியப்பட்டவர்.
இந்நிலையில் டெல்லியின் மையப்பகுதியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் எனப்படும், அரசமைப்புச் சட்ட மன்றத்தில், வெறுப்புணர்வுக்கு எதிரான கூட்டமைப்பு ஏற்பாடு செய்த 'அச்சத்தில் இருந்து சுதந்திரம்' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடந்துள்ளது. இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக உமர் காலித் சென்றுள்ளார். இந்த மன்றத்துக்கு அருகே உள்ள ரஃபி சாலையில் உள்ள ஒரு டீ கடையில் உமர் காலித் நின்றிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
அங்கே டீ கடையில் வெள்ளை சட்டை அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் உமர் காலித்தை கீழே தள்ளி விட்டுவிட்டு பிறகு துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த நபர் உமர் காலித்தை கீழே தள்ளியதால் உமர் காலித் மீது குண்டடி படவில்லை என்று கூறப்படுகிறது.
உமர் காலித் துப்பாக்கியால் சுடப்பட்டதை டெல்லி இணை போலீஸ் கமிஷனர் அஜய் சவுதரி உறுதி செய்துள்ளார்.
இது குறித்து இணை போலீஸ் கமிஷர் அஜய் சவுதரி கூறுகையில், "உமர் காலித் டீ கடையில் தனது நண்பர்களுடன் டீ குடித்துக்கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதில் அவர் கீழே விழுந்ததால் அவருக்கு குண்டடி காயம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி போலீஸ் கமிஷனர் மதுர் வெர்மா கூறுகையில், "இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. தன்னை துப்பாக்கியால் சுட்டதாக உமர் காலித் கூறியுள்ளார். தன்னை யாரோ தள்ளியதாகவும் அதன் பிறகு துப்பாக்கியால் சுட முயற்சித்தாகவும் கூறியுள்ளார். ஆனால், அந்த நபர் உடனடியாக சுடவில்லை என்றும் கூறப்படுகிறது. உமர் காலித்தை துப்பாக்கியால் சுட்ட பிறகு அங்கிருந்த மக்கள் அந்த நபரைப் பிடிக்க விரட்டியுள்ளனர். அப்போது அந்த நபர் வானை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்" என்று தெரிவித்தார்.
உமர் காலித் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது அவருடன் இருந்த சைஃபி என்பவர் கூறுகையில், "நாங்கள் டீ குடிக்க சென்றபோது, மூன்று நபர்கள் எங்களை நோக்கி வந்தனர். அதில் ஒருவன் காலித்தை பிடித்தான். அதை உமர் காலித் தடுத்தார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் துப்பாகிச் சத்தம் கேட்டது. ஆனால், உமர் காலித்துக்கு காயம் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஓடும்போது மீண்டும் ஒருமுறை துப்பாக்கியால் சுட்டார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உமர் காலித் கூறுகையில், "இது அரசுக்கு எதிரான குரல்களை அமைதியாக்கும் முயற்சி. இந்த நாட்டில் ஒரு அச்ச நிலை நிலவுகிறது. அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.