காணாமல் போன ஜே.என்.யூ மாணவர் நஜீப் பற்றி தகவல் தந்தால் ரூ.10 லட்சம்: சி.பி.ஐ
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாயமான மாணவர் நஜீப் அகமது பற்றி தகவல் தந்தால் ரூ10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிபிஐ அறிவித்துள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின், உயிரி தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மாணவர் நஜீப் அகமது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென காணாமல் போனார்.
அதைதொடர்ந்து மாணவரின் தாயார் பாத்திமா தனது மகனை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் அளித்தார். டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவரை தேடி வந்தனர். விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழலில் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி மாணவரின் தாயார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதைதொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம் மாணவர் நஜீப் அகமது காணாமல் போன வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில் காணாமல் போன ஜே.என்.யூ மாணவர் நஜீப் அகமதுவை கண்டுபிடித்து தந்தாலோ அல்லது அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து தகவல் தெரிவித்தாலோ 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இதுதொடர்பாக, 011-24368641, 24368634, 9650394796 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.