தேசதுரோக குற்றச்சாட்டு: ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் கைது- இந்தியாவுக்கு எதிரான கோஷங்களால் பதற்றம்!
டெல்லி: தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக (ஜே.என்.யூ) மாணவர் சங்கத் தலைவர் கன்கையா குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைதைக் கண்டித்து இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை ஜே.என்.யூ. மாணவர்கள் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து ஜே.என்.யூவில் கருத்தரங்கம் ஒன்று அனுமதியில்லாமல் நடத்தபட்டுள்ளது. இது குறித்து பாஜக எம்பி மகேஷ் கிரி போலீசில் புகார் செய்தார்.. இதேபோல் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியும் புகார் தெரிவித்திருந்தது.
இதற்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். டெல்லி போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டிருந்தார். பாரத தாயை அவமரியாதை செய்வதை சகித்துக் கொண்டிருக்க முடியாது என ஸ்மிருதி இரானி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்கையா குமாரை பல்கலைக் கழக மாணவர் விடுதியில் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து பல இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது.
அப்போது அப்சல் குருவுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை மாணவர்கள் எழுப்பியுள்ளனர். ஒரு பிரிவு மாணவர்கள், பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனவும் வெறித்தனமாக முழக்கங்கள் எழுப்பியுள்ளனர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹபீஸ் ஆதரவு
இந்த விவகாரங்கள் கடந்த 2 நாட்களாக சமூகவலைதளங்களிலும் எதிரொலித்து கொண்டிருக்கிறது. #PakstandswithJNU; #ShutDownJNU என ஏகத்துக்கும் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அதுவும் லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சயீத்தும் ஜே.என்.யூ. மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் ஒரு தகவல் பரவ ஜே.என்.யூவில் உள்ள தேசவிரோத மாணவர்கள் மீது கடும் கண்டனங்கள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.