ஜேஎன்யூ மாணவர் தலைவர் கன்னையா தேசவிரோத செயலில் ஈடுபடவில்லை- சொல்வது பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா
டெல்லி: தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக (ஜே.என்.யூ) மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் எந்த ஒரு தேசவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்று பாஜகவின் எம்.பி. சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியதால் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அப்சல்குருவுக்கு ஆதரவான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதற்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதேபோல் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
Have heard transcript of speech of Kanhaiya, our Bihar boy president of JNUSU. He has said nothing anti national or against constitution.
— Shatrughan Sinha (@ShatruganSinha) February 17, 2016
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்ததை பதிவு செய்ய சென்ற செய்தியாளர்கள், ஆதரவாளர்கள் மிக கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதனிடையே கன்னையாகுமார் தேசவிரோதமாக எதுவும் பேசவில்லை என்று இடதுசாரித் தலைவர்கள் உள்ளிட்டோர் சுட்டி வருகின்றனர். இந்த பஞ்சாயத்தில் பாஜக மேலிடத்தை கடுமையாக எதிர்த்து வரும் அக்கட்சியின் கலகக் குரல் எம்பி சத்ருகன் சின்ஹாவும் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக சத்ருகன் சின்ஹா தமது ட்விட்டர் பக்கத்தில், மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் உரையை முழுவதும் படித்துப் பார்த்தேன். அவர் பீகாரைச் சேர்ந்தவர். அவரது பேச்சில் எந்த ஒரு தேசவிரோத கருத்துகளும் அரசியல் சாசனத்துக்கு எதிராக இல்லை. கன்னையாகுமார் விரைவில் விடுதலையாவார்... அவரது விடுதலைக்காக பிரார்த்திப்போம் என பதிவிட்டுள்ளார். இது பாஜகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.