வேலைக்கு போக சொல்லி தொந்தரவு செய்த அப்பா... திட்டமிட்டு கொலை செய்த மகன்
மஹாராஷ்டிராவில் வேலைக்கு போக சொல்லி தொந்தரவு செய்த அப்பாவை மகன் கொலை செய்து இருக்கிறான்.
தானே: மஹாராஷ்டிராவில் வேலைக்கு போக சொல்லி தொந்தரவு செய்த அப்பாவை மகன் கொலை செய்து இருக்கிறான். சுரேஷ் திண்டா என்ற அந்த வேலையில்லாத நபர் தன் தந்தை தர்மா திண்டாவை கோடாலியை வைத்து தாக்கி கொடூரமாக கொலை செய்து இருக்கிறான்.
இந்த கொடூர சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடந்து இருக்கிறது. தற்போது கொலை செய்யப்பட தர்மாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
இந்த மோசமான காரியத்தை செய்த சுரேஷ் திண்டா தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். வேலையில்லாத விரக்தி தன்னை அதிகம் கஷ்டப்படுத்தியதாக வாக்குமூலம் அளித்து இருக்கிறான்.
வேலையில்லா பட்டதாரி
தானேவில் இருக்கும் 'பிவாண்டி' என்று கிராமத்தில் வசித்து வருகிறார் தர்மா திண்டா. இவரது மகன் சுரேஷ் திண்டா பட்டபடிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டு இருக்கிறார். ஆனால் நல்ல மதிப்பெண் இருந்தும் சுரேஷுக்கு வேலை கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் தன் தந்தையுடன் சேர்ந்து விவசாய வேலைகளில் உதவி செய்து இருக்கிறார்.
சண்டை வந்தது
அவர்கள் பார்த்த விவசாயம் கடந்த மூன்று மாதங்களாக சரியாக லாபம் கொடுக்காததால் குடும்பம் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து சுரேஷின் தாய் போலீசில் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். விவசாயம் இல்லாததால் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த சுரேஷ் குடும்பத்தில் உள்ளவர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு இருக்கிறான்.
கொலை செய்ய முயற்சி
இந்த சண்டை கடந்த இரண்டு வாரமாக பெரிய அளவில் மாறியிருக்கிறது. அப்பாவின் திட்டுகளை பொறுக்க முடியாத சுரேஷ் அவரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளான். மேலும் இரண்டு முறை கொலை முயற்சியும் செய்துள்ளான். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது கோடாலியை வைத்து தர்மாவின் மண்டையில் தாக்கி கொலை செய்து உள்ளான். இதனால் சம்பவ இடத்திலேயே தர்மா மரணம் அடைந்து உள்ளார்.
வீட்டை விட்டு ஓட்டம்
இந்த கொலையை செய்தவுடன் சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தற்போது போலீசார் இவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அதேபோல் தர்மாவின் உடலை பிரேத பரிசோதைக்கு அனுப்பி இருக்கின்றனர். தர்மாவின் முகத்தில் 13 இடங்களில் வெட்டு காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சுரேஷ் மீது 302ம் பிரிவின் கீழ் கொலை வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.