பாலியல் வழக்கு... சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவுக்காக ஆஜரானார் பாஜக மூத்த தலைவர் சு.சுவாமி !
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமின் வழக்கில் ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பா.ஜ.க.,வின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான சுப்ரமணியன் சுவாமி ஆஜராகி வாதாடினார்.
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள அவரது ஆசிரமத்தில், பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 சிறுமிகள் அளித்த புகாரின் பேரில், கடந்த 2013ம் ஆண்டு ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயும் பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆசாராம் பாபு இதுவரை தாக்கல் செய்த அனைத்து ஜாமின் மனுக்களும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தற்போது வயது முதிர்வு மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று ஆசாராம் பாபு மீண்டும் கடந்த மாதம் ஜோத்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணை முடிவடைந்த நிலையில், ஆசாராம் பாபுவின் ஜாமின் மனுவை இன்று தள்ளுபடி செய்து செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்துடன் சேர்த்து 6-வது முறையாக ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆசாராம் ஆஜாராகவில்லை என்றாலும் அவரது ஆதரவாளர்கள் பலர் நீதிமன்றத்தில் குவிந்தனர்.