சுஷ்மா சுவராஜுக்கு கிட்னி தானம் செய்ய விவசாயி ரெடி!
சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கு சிறுநீரக தானம் அளிக்க ஜோத்பூர் இளம் விவசாயி முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக தானம் வழங்க ஜோத்பூர் இளம் விவசாயி ஒருவர் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஒசியா தாலுகாவில் உள்ள எகல்கோரி என்ற கிராமத்தில் வசித்து வரும் விசேக் விசோனாய் என்ற அந்த இளைஞர் சமூக வலைதளத்தின் மூலமாக இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.
வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் இருப்பதனால் மட்டும் இதனைச் செய்ய தான் முன்வரவில்லை என்றும், தக்க தருணத்தில் தேவையானவர்களுக்கு உதவும் அவரது நல்ல குணம் கருதியே சிறுநீரக தானம் வழங்க முன்வந்துள்ளதாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் கூலித் தொழிலாளிகளை மீட்பதில் சுஷ்மா மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
மேலும், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தொழிலாளிகளை மீட்பதில் எப்போதும் துரிதமாக செயல்பட்டு உதவிக்கரம் நீட்டும் அவரது நல்ல குணத்திற்காகவும் இந்த சிறுநீரக தானம் வழங்க என்னை ஊக்குவித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிறுநீரக பாதிப்பினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சுஷ்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.