மணல் மாஃபியாக்கள் பற்றி செய்தி வெளியிட்ட மத்திய பிரதேச பத்திரிகையாளர் லாரி ஏற்றிக் கொலை
மணல் மாஃபியாக்கள் பற்றி செய்தி வெளியிட்ட மத்திய பிரதேச பத்திரிகையாளர் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோத்வாலி : மத்தியபிரதேசத்தில் மணல் மாஃபியாக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்த, பத்திரிகையாளர் சந்தீப் சர்மா மர்ம நபர்களால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில், கோத்வாலி பகுதியில் வசித்து வருபவர் சந்தீப் சர்மா. இவர் தேசிய ஊடகம் ஒன்றில் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தார். மாநிலத்தில் நடக்கும் இயற்கை வள சுரண்டல்கள் மற்றும் மணல் கொள்ளை பற்றி தொடர்ந்து செய்திகளைப் பதிவு செய்து வந்தார்.
இந்நிலையில், காவல்துறை உயரதிகாரி ஒருவர் மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ளது குறித்து ஆடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டார் சந்தீப் சர்மா. இந்த விவகாரத்தால் அந்த உயரதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார் சந்தீப் சர்மா. இந்நிலையில், நேற்று தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி மோதி சந்தீப் சர்மா சம்பவ இடத்திலேயே பலியானார்.
#WATCH:Chilling CCTV footage of moment when Journalist Sandeep Sharma was run over by a truck in Bhind. He had been reporting on the sand mafia and had earlier complained to Police about threat to his life. #MadhyaPradesh pic.twitter.com/LZxNuTLyap
— ANI (@ANI) March 26, 2018
மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அருகிலேயே சம்பவம் நடந்தும் பல மணி நேரம் கழித்தே, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகானிடம் கேள்வி எழுப்பியபோது, மாநிலத்தில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், இந்த விவகாரத்தில் உடனடியாக கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.