பழங்குடியின மக்களை அசிங்கப்படுத்திவிட்டது பாகுபலி.. கொதிக்கும் ஆங்கில பத்திரிகையாளர்
டெல்லி: பாகுபலி திரைப்படத்தில் பழங்குடியின மக்களை அசிங்கமாகவும், கொடூரமானவர்களாகவும், பலாத்காரம் செய்யும் காட்டுமிராண்டிகளாகவும் சித்தரித்துள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளரும், இந்தியா டுடே குழுமத்தின் துணை தலைவரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் தலைமை எடிட்டருமான சேகர் குப்தா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சக்கைபோடு
ரூ.250 கோடி பொருட்செலவில், ராஜமவுலியின் இயக்கத்தில், பிரமாண்டமாக வெளியாகியுள்ள படம் 'பாகுபலி'. அதன் பிரமாண்டம் மற்றும் திரைக்கதை, நடிப்பு போன்ற பல்வேறு அம்சங்களால் படம் பாக்ஸ் ஆபீசில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் வசூல் சாம்ராஜ்யம் நடத்தி வருகிறது.
விமர்சனம்
இதனிடையே, 'பாகுபலி' திரைப்படத்தில், சில குறைகளை சுட்டிக்காட்டி தமிழ் எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ் வெளியிட்ட கருத்து கடந்த வாரத்தில் சர்ச்சையை உருவாக்கியிருந்தது. தரைரேட் விட்டலாச்சாரியா படம், ஆங்கில படங்களின் காட்சி காப்பி, பக்கா தெலுங்கு திரைப்படம் என்றெல்லாம் அவர் விமர்சனம் செய்திருந்தார்.
ஜாதிய மோதல்கள்
இதனிடையே, 'பாகுபலி' திரைப்படத்தின் உருவாக்க விமர்சனங்களை தாண்டி, ஜாதிய ரீதியான தேடல்கள் தற்போது அதிகரித்துள்ளன. இதன்விளைவாக, படத்தில் வரும், பகடை என்ற வார்த்தைக்காக குறிப்பிட்ட ஜாதி பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதேபோல, பழங்குடியின ஜாதியினர் அசிங்கப்படுத்தப்பட்டுவிட்டதாக கொதிக்கிறார், முன்னணி பத்திரிகையாளர் சேகர் குப்தா.
|
பத்திரிகையாளர் டிவிட்
இதுகுறித்து டிவிட்டரில் சேகர் குப்தா கூறியுள்ள கருத்து: பழங்குடியினரை மிக மோசமாக சித்தரித்துள்ளது 'பாகுபலி'. அவர்களை கருப்பாகவும், அச்சுறுத்தும் முகத்தோற்றம் கொண்டவர்களாகவும், அசிங்கமானவர்களாகவும், பலாத்காரம் செய்யும் காட்டுமிராண்டிகளாகவும், கருப்பு பல் கொண்டவர்களாகவும் திரைப்படம் சித்தரித்துள்ளது. இது வெட்கக்கேடான செயல். இவ்வாறு தனது டிவிட்டில் அவர் கூறியுள்ளார்.
காட்சிக்கு அவசியம்
'பாகுபலி' திரைப்படத்தில், மகிழ்மதி நாட்டின் மீது படையெடுத்து வரும் காட்டுவாசி படையினரைத்தான், சேகர் குப்தா குறிப்பிட்டதுபோன்ற தோற்றத்தில் இயக்குநர் காண்பித்திருப்பார். அக்காலகட்டத்தில் மலைவாழ் மக்களாக வாழ்ந்தவர்களை குறிப்பிடவும், வில்லன்களை பயங்கரமாக காட்டவும் அந்த காட்சி அவசியப்பட்டிருந்தது. ஹாலிவுட் திரைப்படங்களிலும் கூட இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்ற வரலாறு உள்ளது. ஒருபடி மேலேபோய் பல ஹாலிவுட் படங்களில் நரமாமிசம் சாப்பிடுவோர் என்று கூட காண்பித்திருப்பார்கள்.
அசிங்கம் எப்படி
இந்நிலையில், சேகர் குப்தாவின் கருத்துக்கு அவரது டிவிட்டர் கணக்கிலேயே பதிலடிகளும் விழுந்தவண்ணம் உள்ளன. சிலர் ஆதரவாகவும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். 'தாட்கன்' என்ற டிவிட்டர் பயனாளர், தனது பதிவில், பழங்குடியினரை கருப்பாக காண்பித்துள்ளார் ஓகே. அதை அசிங்கம் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள். கருப்பு என்றால் அசிங்கம் என்பது உங்கள் மனதில் உள்ள கருத்துதானே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதைத்தான் காய்த்த மரம் கல்லடி படும் என்று சொல்வார்களோ..?