1990களில் கூட இவ்வளவு மோசம் இல்லை.. இன்று காஷ்மீர் நிலைமை தெரியுமா.. குமுறும் பத்திரிக்கையாளர்கள்
Recommended Video
சென்னை: காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களால் செய்திகளை அனுப்ப முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாம்.
இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சியின்போது செய்தியாளர்கள் பட்ட அனுபவங்களை நினைவுகூர்வதை போல இந்த நிலைமை இருப்பதாக பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு, இணையதள சேவைகள் கட் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் தொடர்பு
இந்த கெடுபிடிகளால், தகவல் தொடர்புக்கு வேறு வழியில்லாததால், ஊடகத்தினர், அங்கேயிருந்து செய்திகளை அனுப்பி வைக்க முடியவில்லை. முன்னணி ஊடகத்தினருக்கு, நிருபர்கள் இருந்தும்கூட, நாளிதழ்களுக்கு செய்திகள் அனுப்பி வைக்க முடியவில்லை.
அப்போ இப்படி இல்லை
"காஷ்மீரில் தீவிரவாதமும், கலவரமும் மிகவும் உச்சத்தில் இருந்த 1989 டிசம்பர் முதல், முதல் 1995 பிப்ரவரி வரையிலான கால கட்டங்களில் கூட என்னால் காஷ்மீரிலிருந்து எப்படியோ, செய்தியை அனுப்ப முடிந்தது. ஆனால், இன்று சோகம் என்னவென்றால், நான் வேலை பார்க்கும் செய்தித்தாளில் ஸ்ரீநகர் டேட்லைன் போட்ட ஒரு செய்தியை கூட பார்க்க முடியவில்லை" என்று தெரிவிக்கிறார் முன்னணி ஆங்கில நாளிதழ் செய்தியாளர் ஒருவர்.
அரசு துறை
அந்த காலகட்டத்தில், செல்போன்கள் இல்லை. லேன்ட்லைன் போன்கள், டெலக்ஸ் மெஷின் இருந்தது. பேக்ஸ் வசதி கூட எங்காவது கிடைக்கும். மத்திய தந்தி அலுவலகத்தில் இருந்து கூட செய்தி அனுப்பியுள்ளேன். ஆனால், இப்போது எல்லாமே தனியார்மயமாகியுள்ளது. ஆனால் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது முன் எப்போதும் இல்லாதது என்கிறார் அந்த செய்தியாளர்.
பாகிஸ்தானிலிருந்து அனுப்பினேன்
மேலும் அவர் கூறும் ஒரு தகவல் சுவாரசியமானது. நான் கொழும்பு, இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களிலும் செய்தியாளராக பணியாற்றியுள்ளேன். 1999ம் ஆண்டு முஷ்ரப் தலைமையில் ராணுவ கிளர்ச்சி நடந்தபோது, பாகிஸ்தானில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முடக்கப்பட்டன. ஆனால், அங்கேயுள்ள பத்திரிக்கையாளர் நண்பரின் சேட்டிலைட் போன் மூலம், எனது செய்தியை எனது பத்திரிக்கை அலுவலகத்திற்கு தெரிவிக்க முடிந்தது என்கிறார் அவர்.