கேரளாவில் திறமையற்ற ஊழல் ஆட்சி...தவறான கொரோனா கணக்கு...பாஜக தலைவர் குற்றச்சாட்டு!!
காசர்கோடு: கேரளா அரசு திறமையற்ற, ஊழல் அரசாக இருக்கிறது. கொரோனா புள்ளி விவரங்களை மாற்றி, எதிர்மறை செயல்பாடுகளுடன் நடந்து கொள்கிறது என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி மந்திரம் என்ற பெயரில் பாஜக மாவட்ட கமிட்டி அலுவலகத்தை காசர்கோடில் காணொளி காட்சி மூலம் பாசக் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைத்துப் பேசினார். அப்போது, ''மாநிலத்தில் உண்மையான கொரோனா எண்ணிக்கையை கேரள அரசு மாற்றிக் கூறுகிறது. பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் கூறி வருகிறது. ஆனால், கேரள அரசின் நடவடிக்கை எதிர்மறையாக இருக்கிறது.
மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரி முன்னணி இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன. நடப்பாண்டில் உள்ளாட்சி தேர்தலும், அடுத்த ஆண்டில் சட்டமன்ற தேர்தலும் நடக்கவுள்ளது. மக்கள் இந்த தேர்தல்களில் பாஜகவை ஆதரிக்க வேண்டும்.
கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையில் தங்கம் என்பது மஞ்சள் நிறம் அல்ல. சிவப்பு நிறத்திலானது. அரசு கருவூலத்தை கையாளுவதில் மோசடி, தலித்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது, அரசு சலுகைகள் சிலருக்கு மட்டும் கிடைப்பது என்று மோசடிகள் அதிகரித்து வருகிறது. திறமையற்ற ஆட்சி என்பதுடன் ஊழல் ஆட்சியாகவும் இருக்கிறது. வன்முறையில்தான் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது'' என்று தெரிவித்தார்.
மேற்கு செக்டாரில்.. வரைபடங்களை கேட்டு.. சீனாவிற்கு அழுத்தம் தரும் இந்தியா.. இதுதான் காரணம்
இவருக்கு பதிலடி கொடுத்து இருக்கும் கேரளா சிபிஎம்(எம்) கட்சியின் கமிட்டி உறுப்பினர் எம்.பி ராஜேஷ் கூறுகையில், ''மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளில் மற்ற மாநிலங்களுக்கு உதராணமாக கேரளா இருக்கிறது. சர்வதேச அரங்கில் பலரும் பாராட்டியுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், மத்திய சுகாதாரத்துறை கேரளாவை பாராட்டி இருக்கின்றன. கர்நாடகா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு இதுபோன்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும். தங்க கடத்தலை பாஜக அரசியலாக்கி வருகிறது'' என்றார்.