அமித்ஷா மீதான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரணம்.. சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை தொடருகிறது
டெல்லி: சிபிஐசிறப்பு நீதிமன்ற, நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
குஜராத்தில் 2006ம் ஆண்டு நடைபெற்ற, சோராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட சிலர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற, நீதிபதி லோயா 2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நாக்பூரில் உறவினர் திருமண நிகழ்ச்சி சென்ற போது திடீரென மாரடைப்பு என கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி லோயா இறந்தார். அவரது மரணத்தி்ல் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட 3 தனித்தனி வழக்குகள் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.
இந்த மரண வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழக்கு தொடர்ந்தவருக்கு வழங்க வேண்டும் என ஜனவரி 16ம் தேதி மகாராஷ்டிரா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த உள்ளதாக, விசாரணை குழு கோரும் மனுதாரர் தரப்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.