கரண்ட்ட ஏன்டா நிறுத்தினிங்க? மின்வாரிய ஊழியர்களை ஓட ஓட துப்பாக்கியால் சுட்ட முன்னாள் நீதிபதி!
பவர் கட்டானதால் ஆத்திரமடைந்த முன்னாள் நீதிபதி மின்வாரிய ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: குர்கானில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த முன்னாள் நீதிபதி மின்வாரிய ஊழியர்களை ஓட ஓட துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து அந்த நீதிபதி மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி: அருகே உள்ள குர்கானைச் சேர்ந்த ஏ.கே.ராகவ் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது வீட்டின் அருகே மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று மாலை வயர்களை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பணி காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டடதாக தெரிகிறது.
மேலும் பல முறை மின்சாரம் போய் போய் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் போன மின்சாரம் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட நீதிபதி
இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் நீதிபதி ராகவ், வெளியே வந்து மின்வாரிய ஊழியர்களை கண்டித்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுட்ட நீதிபதி
இதையடுத்து வீட்டில் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்த முன்னாள் நீதிபதி ராகவ் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டியுள்ளார். பின்னர் ஊழியர்களை நோக்கியும் சரமாரியாக சுட்டுள்ளார்.
ஓட்டம் பிடித்த ஊழியர்கள்
இதனால் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்துள்ளனர் ஊழிர்யர்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நீதிபதி மீது வழக்கு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ஊழியர்களை கொலை செய்ய முயன்றதாக முன்னாள் நீதிபதி ராகவ் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராகவ் மின்வாரிய ஊழியர்களை சுட்டபோது அந்த தோட்டாக்கள் டிராக்டர் டிராலி மற்றும் அதன் டயர்களை தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.