யாகூப் மேமனின் கடைசி மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு கொலை மிரட்டல்
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உறுதி செய்து, கடைசித் தீர்ப்பை பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டு வெடித்தது. இதில், அப்பாவி மக்கள் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே அதிர்ச்சியடையச் செய்தது இந்த தாக்குதல் சம்பவம்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டது.
தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி யாகூப் மேமன் இரண்டு முறை கருணை மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அவற்றை ஜனாதிபதி நிராகரித்தார். இறுதி நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி யாகூப் மேமன் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. பின்னர், அந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து 30ம் தேதி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில், யாகூப் மேமனின் மனுவை தள்ளுபடி செய்த அமர்வுக்கு தலைமை வகித்த நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. பெயர் விவரம் எதுவும் இல்லாமல் வந்துள்ள அந்தக் கடிதத்தில், ‘நீதிபதி தீபக் மிஸ்ராவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டாலும், அவரை குறி வைத்துள்ளோம்' என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதத்தை டெல்லி போலீசில் ஒப்படைத்துள்ளார் நீதிபதி தீபக் மிஸ்ரா. மிரட்டல் கடிதத்தின் அடிப்படையில் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மிரட்டல் கடிதம் எதிரொலியாக தீபக் மிஸ்ரா மட்டுமின்றி, யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மூவரின் பாதுகாப்பையும் போலீசார் அதிகப் படுத்தியுள்ளனர்.
டைகர் மேமன்
இதற்கிடையே, யாகூப் மேமனின் அண்ணனும், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியுமான டைகர் மேமன், மும்பையில் உள்ள தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு போனில் பேசியதாகவும், அப்போது யாகூப் மேமன் விவகாரத்தில் அனைவரையும் பழிவாங்குவேன் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தூக்குத் தண்டனைக்கு சில மணி நேரங்கள் முன்பு டைகர் மேமன் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.