டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு.. டெல்லி நீதிமன்றம்!
டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீது மே 31ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி: டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீது நாளை மறு நாள் தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினகரனை ஜாமீனில் விடுவிக்க கூடாது என டெல்லி போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உட்பட நான்கு பேரை டெல்லி குற்றவியல் போலீசார் கடந்த மாதம் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா சார்பாக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது டிடிவி தினகரனை ஜாமினில் விடுவிக்கக் கூடாது என்று டெல்லி போலீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டிடிவி தினகரனை வெளியில் விட்டால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை கைது செய்ய டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தது.
இதையடுத்து டிடிவி தினகரனின் ஜாமீன் மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி நிதமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக டிடிவி தினகரனின் காவலை ஜூன் 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.