"ரெட்" போட்டதும் "சிக்னலில்" நிற்காவிட்டால் ரூ.15,000 அபராதம்: வருகிறது புதிய போக்குவரத்து சட்டம்
டெல்லி: புதிய போக்குவரத்து சட்டத்தின்படி சிக்னலில் சிவப்பு விளக்கு எரிகையில் நிற்காமல் சென்றால் ரூ.15 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டி வரும்.
சாலை விதிமீறல்கள், விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு புதிய போக்குவரத்து சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த சட்டத்தின்படி தண்டனை கடுமையாக இருக்கும்.
புதிய சாலை போக்குவர்தது மற்றும் பாதுகாப்பு சட்டம் 2014ன்படி அபராதங்கள் 3ல் இருந்து 50 மடங்கு அதிகரக்கப்பட்டுள்ளது.
அதிவேகம்
அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு தற்போது ரூ.400 முதல் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவே புதிய சட்டத்தின்கீழ் ரூ.5,000 முதல் ரூ.12,500 அபராதமும், 8 வாரங்கள் வரை ஓட்டுநர் உரிமம் ரத்தும் செய்யப்படும்.
மது
குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கினால் தற்போது ரூ.3,000 அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய சட்டத்தின்படி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.15,000 அபராதமும், ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது முறை போதையில் சிக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
பேருந்து ஓட்டுநர்கள்
பேருந்து ஓட்டுநர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.50,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இந்த அபராதம், தண்டனை தவிர்த்து 25 வயதுக்குட்டப்பட்ட ஓட்டுநர்களின் உரிமம் 3 மாதங்கள் ரத்து செய்யப்படும்.
சிக்னல்
சிக்னலில் சிவப்பு விளக்கு எரிகையில் நிற்காமல் சென்றால் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை அபராதமும், ஓட்டுநர் உரிமம் ஒரு மாதம் ரத்தும் செய்யப்படும். மேலும் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும்.
குழந்தை
விபத்து ஏற்படுத்தி குழந்தை இறக்க காரணமாக இருந்தால் ரூ.3 லட்சம் அபராதமும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். பதிவு எண் இல்லாத வாகனத்தை ஓட்டினால் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.
நாடாளுமன்றம்
இந்த புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு அது வரும் குளிர்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.