உடலில் மண்ணெண்ணை ஊற்றுவது தற்கொலை முயற்சி அல்ல: டெல்லி கோர்ட்டு அதிரடி
டெல்லி: உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொள்வது தற்கொலை முயற்சி அல்ல என்று டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20ந் தேதி தெற்கு டெல்லியில் உள்ள கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு ஒருவர் வந்துள்ளார். அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்ச்சி செய்துள்ளார்.
இது குறித்து போலீசார் அவர் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. 16 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து நீதிபதி அனுஜ் அகர்வால் தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில் கூறும்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றிவிட்டு, தீக்குச்சியையும் எடுத்துள்ளார். இது தற்கொலைக்கான ஒரு தயாரிப்பு மட்டுமே. இதை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என தீர்ப்பளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், என்னைப் பொறுத்தவரை குறிப்பிட்ட அந்த நபரின் இந்த செயல் வெறும் தயாரிப்பு தானே தவிர, அதற்கு மேல் எதுவும் இல்லை. ஒருவர் தனது உடலில் வெறும் மண்ணெண்ணையை ஊற்றுவது தற்கொலை முயற்சி அல்ல என்று தெரிவித்தார்.