மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணன் ஓய்வு! புதிய தலைவராக சதாசிவம்?
டெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியில் இருந்து கே.ஜி. பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக கேரளா ஆளுநர் சதாசிவம் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
நாட்டின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது முதல் அதன் தலைவர் பதவிக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரை நியமிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ரங்கநாத் மிஸ்ரா, வெங்கடாசலையா, எஸ். வர்மா, ஏ.எஸ். ஆனந்த், ராஜேந்திர பாபு ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த மரபின்படி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியில் இருந்து 2010 ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்ற கே.ஜி. பாலகிருஷ்ணன் அதே ஆண்டு ஜூனில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
5 லட்சம் வழக்குகள் விசாரணை
இவரது பதவிக் காலத்தில் 4,93,445 வழக்குகள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டன. அதில், 4,64,079 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாக வைத்து தன்னிச்சையாக சுமார் ஆயிரம் வழக்குகளில் கே.ஜி. பாலகிருஷ்ணன் தீர்ப்பு அளித்துள்ளார். காவல் துறை துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகார வரம்பைத் தெளிவுபடுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் சார்பில் முறையீடுகளை முன்வைக்க கே.ஜி. பாலகிருஷ்ணன் பதவிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது பாலகிருஷ்ணனின் ஓய்வைத் தொடர்ந்து ஆணையத்தின் புதிய தலைவராக கேரள ஆளுநராக இருக்கும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவத்தை ஜனாதிபதி விரைவில் நியமிக்கக் கூடும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை அப்பொறுப்பை ஆணையத்தின் உறுப்பினரும், நீதிபதியுமான சிரியாக் ஜோசஃப் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.