பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுங்கள்....நிர்பயா வழக்கில் பெண் நீதிபதி ஆதங்கம்
பெண்களை மரியாதையுடன் எவ்வாறு நடத்த வேண்டும் என்று வளரும் தலைமுறையினருக்கு கல்வி மூலம் புகட்ட வேண்டும் என்று நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தெரிவித்துள்ளார்.
டெல்லி : நிர்பயா வழக்கில் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை மேற்கோள் காட்டி பெண்கள் மீதான நன்மதிப்பை கூட்ட அறிவுரை கூறினார் நீதிபதி பானுமதி.
டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பலியானார். வன்ம எண்ணம் படைத்த 6 பேர் கொடூரத்தின் உச்சமாக அரங்கேற்றிய இந்த பாலியல் பலாத்கார சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக வெளியே செல்லும் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என்பதை நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கு உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமான அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனிடையே தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 4 பேருக்கும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
மிகவும் அரிதான வழக்கு என்பதால் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது, குற்றவாளிகளுக்கு கருணை காட்ட எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த நீதிபதி பானுமதி பாலியல் வழக்கு குறித்த தனது கருத்தை கூறும் போது, பெண்கள் மீது எப்படி மதிப்போடு நடந்து கொள்ள வேண்டும், அவர்களிடம் எப்படி கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை முறையான கல்வி முறை மூலம் புகட்ட வேண்டியது கட்டாயம் என்பதை இந்த வழக்கு உணர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.
சுவாமி விவேகானந்தர் பொன்மொழியை சுட்டிக்காட்டிப் பேசிய நீதிபதி ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமெனில் அறிவை விரிவு செய்வதோடு பெண்களுக்கான சமநீதியும் சமுதாயத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.