வங்கிக் கணக்கு தொடங்க விரும்பும் ஒவ்வொருவரும் தீவிரவாதியா?.. நீதிபதி சந்திரசூட் விளாசல்
Recommended Video
டெல்லி: ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் திட்டமே மிகப் பெரிய மோசடியாகும். வங்கிக் கணக்கு தொடங்க விரும்பும் ஒவ்வொருவரும் தீவிரவாதியா என்ன என்று உச்சநீதிமன்ற நீதிபதி டிஒய் சந்திரசூட் கடுமையாக கூறியுள்ளார்.
ஆதார் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் தீபக் மிஸ்ரா உள்பட நான்கு நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பையும் அளித்தனர். பெரும்பான்மைத் தீர்ப்பு தற்போது அமலாகவுள்ளது.
நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பை வழங்கியபோது மத்திய அரசை சரமாரியாக விளாசியிருந்தார். அதிலிருந்து சில:
நிதி மசோதாவாக இதை லோக்சபாவில் நிறைவேற்றியதே மிகப் பெரிய சட்ட மோசடியாகும். அரசியல் சாசன மீறலாகும். ராஜ்யசபாவைத் தவிர்த்து விட்டு மத்திய அரசு இதை நிதி மசோதாவாக நிறைவேற்றியது சட்டத்தை மீறிய செயலாகும்.
[ஆதார் ஒரு பிராடு, சட்டவிரோதமானது.. ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்த ஒரே நீதிபதி.. சந்திரசூட்!]
செல்போன் என்பது இன்றைய வாழ்க்கையில் மிக மிக அத்தியாவசியமான ஒன்று. அதை ஆதாருடன் இணைக்க கூறியது மிகப் பெரிய தனி மனித உரி்மை மீறலாகும். ஒருவரது சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும்.
அதேபோலத்தான் வங்கிக் கணக்கு தொடங்கவும் ஆதார் எண் கட்டாயம் என்பது. வங்கிக் கணக்கு தொடங்க விரும்பும் ஒவ்வொருவரும் தீவிரவாதியா என்ன? பண மோசடி செய்வதற்காகவா ஒவ்வொருவரும் வங்கிக் கணக்கு தொடங்குகின்றனர்? இது முற்றிலும் சர்வாதிகாரமான நோக்கமாகும்.
தகவல் சுதந்திரம், தனி மனித சுதந்திரம், புள்ளிவிவர சுதந்திரம், சுய மரியாதை என எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கியுள்ளது ஆதார் திட்டம். இங்கு சேகரிக்கப்படும் தகவல்களை தனியார் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என்று நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.