ஓய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர்.. கடைசி பணிநாளில் தீபக் மிஸ்ராவுடன் மேடை பகிர்வு!
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் தனது கடைசி பணி நாளான இன்று தீபக் மிஸ்ராவுடன் மேடையை பகிர்ந்துகொண்டார்.
Recommended Video
டெல்லி: உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் தனது கடைசி பணி நாளான இன்று தீபக் மிஸ்ராவுடன் மேடையை பகிர்ந்துகொண்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் செல்லமேஸ்வர் உள்ளார். இவர் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாவார்.
கடந்த ஜனவரி 12ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து புகார் தெரிவிக்க செய்தியாளர் சந்திப்பை கூட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்தநிலையில் அவரது பதவிக்காலம் இந்த மாதம் 22-ம் தேதி முடிவடைகிறது.
கடைசி பணிநாள்
இன்றே உச்சநீதிமன்றத்தின் கடைசி பணிநாள் ஆகும். நாளை முதல் உச்சநீதிமன்றத்திற்கு 41 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபக் மிஸ்ரா-செல்லமேஸ்வர்
இந்நிலையில் தனது கடைசி பணி நாளில் தலைமை நீதிபதிக்கு மரியாதை அளிக்கும் வகையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் செல்லமேஸ்வர் மேடையை பகிர்ந்துகொண்டார். இதில் நீதிபதி டிஒய் சந்திரசட் பங்கேற்றார்.
தீபக் மிஸ்ரா மீது புகார்
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வரர் உட்பட 4 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
தலைமை நீதிபதியுடன்
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் மாண்பையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் வகையில் மனக்கசப்புகளை மறந்து செல்லமேஸ்வர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் தனது கடைசி பணி நாளை தலைமை நீதிபதியுடன் கழித்துள்ளார்.
ஏற்கனவே அப்படிதான்
முன்னதாக சுப்ரீம்கோர்ட் பார் அசோசியேஷன் இன்று நடத்த இருந்த பிரிவு உபசார விழாவில் பங்கேற்க செல்லமேஸ்வர் மறுத்து விட்டார். ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு சென்ற போதும் தான் பிரிவு உபசார விழாவை ஏற்கவில்லை என்று நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.
நினைவு கொள்ளும்
இருப்பினும் மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தத்தா, பிரஷாந்த் பூஷன், கோபால் சங்கரநாராயணன் அவருக்கு குறுகிய பிரிவு உபசார உரையாற்றினர். அப்போது பேசிய பிரஷாந்த் பூஷன் எதிர்காலம் இந்த நாட்டுக்கும் ஜனநாயகத்திற்கும் உங்களின் பங்களிப்பை நினைவுகொள்ளும் என்றார்.