நீதித்துறையில் மத்திய பாஜக அரசின் தலையீடு... மீண்டும் வெடிக்கும் நீதிபதி செல்லமேஸ்வரின் கலகக் குரல்
நீதித்துறையில் மத்திய பாஜக அரசின் தலையீட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் நீதிபதி செல்லமேஸ்வர்.
டெல்லி: நீதித்துறையில் மத்திய பாஜக அரசின் தலையீடு சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளையும் உள்ளடக்கி ஆலோசனை நடத்த வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளார் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர்.
இந்திய வரலாற்றிலேயே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் அண்மையில் போர்க்கொடி தூக்கியிருந்தனர். மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமையில் இந்த கலகக் குரல் வெடித்தது.
தற்போது நீதித்துறையில் மத்திய பாஜக அரசின் தலையீட்டை எதிர்த்து மீண்டும் கலகக் குரல் வெடித்திருக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட 22 நீதிபதிகளுக்கும் நீதிபதி செல்லமேஸ்வரர் கடந்த 21-ந் தேதி கடிதம் அனுப்பியுள்ளார்.
கர்நாடகா நீதித்துறை விவகாரத்தில் மத்திய பாஜக அரசு எப்படி நேரடியாக தலையிட்டிருக்கிறது; கொலிஜியத்தின் முடிவை எப்படி மத்திய பாஜக அரசு அணுகுகிறது என்பதை விவரிக்கிறது அக்கடிதம். கர்நாடகாவின் மாவட்ட நீதிபதியான கிருஷ்ண பகத் மீது நீதித்துறை பெண் ஊழியர் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.
இப்புகாரை கர்நாடகா உயர்நீதிமன்றம் விசாரித்து, பொய்யான குற்றச்சாட்டு என தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் பகத் நிரபராதி என தீர்ப்பளித்தது. இதையடுத்து பகத்தை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக்கான கொலிஜியம் முடிவெடுத்தது.
ஆனால் பகத் மீதான புகாரை மீண்டும் விசாரிக்க பெண் ஊழியர் புகார் கொடுத்திருக்கிறார்; அதனால் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகமே கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பியது. இதனால் தலைமை நீதிபதியும் மீண்டும் விசாரிக்கிறார். ஏற்கனவே கொலிஜியத்தின் பரிந்துரைக்கும் ஒப்புதல் தராமல் 6 மாதம் இழுத்தடித்தும் வருகிறது மத்திய அரசு.
இந்த விவரங்களை தமது கடிதத்தில் விவரித்துள்ள நீதிபதி செல்லமேஸ்வர், இத்தகைய அரசியல் தலையீடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளையும் உள்ளடக்கி ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.