"நொறுங்கும் இதயம்".. நாட்டை பதற வைத்த உ.பி இளம்பெண் கூட்டு பலாத்காரம்..டிவிட்டரில் கொந்தளிப்பு
கான்பூர்: தலித் பெண் ஒருவர், வயலில் புல் அறுத்து கொண்டு வந்தபோது, உயர்ந்த சாதியை சேர்ந்த 4 பேர் அந்த பெண்ணை தூக்கி சென்று நாசம் செய்துள்ளனர்.. பலமாக தாக்கி உடம்பில் உள்ள எலும்புகளை நொறுக்கி உள்ளனர்.. அவரது நாக்கை அறுத்து எறிந்துள்ளனர்.. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த அப்பாவி பெண் பரிதாபமாக மரணமடைந்தார்.. இதையடுத்து, உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று நெட்டிசன்கள் ஹேஷ்டேக்கோடு ட்விட்டரில் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற சிறிய மாவட்டம் உள்ளது.. இங்குள்ள கிராமங்களில் ஒன்றுதான் சண்ட்பா... இந்த கிராமத்தை சேர்ந்த 20 வயது தலித் பெண் ஒருவர் 3 நாளைக்கு முன்பு, விவசாய பகுதியில் புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் அந்த பெண்ணை தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளனர். 4 பேருமே உயர்சாதியை சார்ந்தவர்களாம்.
பெண்ணை சீரழித்ததுடன் கடுமையாக தாக்கியும் உள்ளனர். உடல் முழுவதும் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவுகள் பல இடங்களில் ஏற்படும் அளவுக்கு அடித்துள்ளனர்.. உண்மையை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக அவரது நாக்கையும் வெட்டி, சாலையோரம் உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
அந்த வழியாக சென்ற கிராமவாசிகள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பெண்ணை கண்டு, பெற்றோருக்கு விஷயத்தை சொன்னதுடன், ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர்.. சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் போலீசில் புகார் தரப்பட்டது.. அப்புகாரின் பேரில் அவர்கள் கைதாகி உள்ளனர்.
இதனிடையே, அலிகரின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண் சேர்க்கப்பட்டார்.. அவருக்கு இரு கை, கால்களில் உணர்வே இல்லை.. உடம்பில் உள்ள எலும்புகள் நொறுங்கி உள்ளதையும், நாக்கு அறுக்கப்பட்டுள்ளதையும் கண்டு டாக்டர்கள் அதிர்ந்தனர்.. முதுகுத்தண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது... உடம்பில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் தீவிரமான சிகிச்சையை தந்தனர்.. ஆனால், நேற்று அந்த பெண் பரிதாபமாக இறந்து விட்டார்.
ஏற்கனவே உபியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக சொல்லி வரும் நிலையில், இந்த சம்பவம் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பிரியங்கா காந்தி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் வரை இந்த கொடுஞ் சம்பவத்துக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதையடுத்து தலித் பெண்ணான "மனிஷாவுக்கு நீதி வேண்டும்" என்று நெட்டிசன்கள் ஹேஷ்டேக்கோடு ட்விட்டரில் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.. இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக்தான் முதலிடம் பிடித்திருக்கிறது.
"உயிரிழந்த பெண் தலித் என்பதால்தான், எந்த மீடியாவும் இந்த செய்தியை வெளியே கொண்டு வரவில்லை, எல்லா பெண்கள் அமைப்புகளும் இதற்காக போராடவும் முன்வரவில்லை.. நாட்டின் தலைநகரில் நடந்துள்ள இந்த அக்கிரமத்துக்கு போதுமான குரல் எழுப்பப்படவில்லை" என்று கண்டனங்கள் ட்விட்டரில் குவிந்தபடியே உள்ளன. தற்போது இந்த தலித் பெண்ணின் மரணம் நாட்டின் இதயத்தையே நொறுக்கி வருகிறது!