உன்னிடம் மயங்குகிறேன்.. கவிதை பாடிய நீதிபதி கங்குலி... பாலியல் புகார் கூறிய பெண் பரபரப்புத் தகவல்
2012ம் ஆண்டு இறுதியாண்டு சட்டம் படித்தபோது, பயிற்சிக்காக டெல்லி சென்றிருந்த தன்னிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தவறாக நடந்து கொண்டதாகவும், இதேபோல் மேலும் 3 பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் பெண் வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். ஆனால், ஓய்வு பெற்ற அந்த நீதிபதியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியின் பெயர் ஏ.கே.கங்குலி என்று கண்டுபிடித்து வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதியான கங்குலி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் அளித்த வாக்குமூலம் குறித்து பரபரப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் அப்பெண், நீதிபதி கங்குலியின் நடவடிக்கை வெறுக்கத்தக்கதாக இருந்ததாகவும், தனது அறையில் தங்குவதற்கு தன்னை வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அப்பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது :-
கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு 8 மணி முதல் 10.30 மணி வரை நீதிபதி கங்குலியுடன் டெல்லி லீ மெரீடியன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தேன். அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பு தொடர்பான அபிடிவிட் ஒன்றை தயாரிப்பதற்காக அவர் என்னை அழைத்திருந்தார்.
அந்த அபிடிவிட் மறுநாள் காலையே கொடுக்கப்பட வேண்டும் என்பதால், இரவில் அவருடனேயே தங்கி அபிடவிட் தொடர்பான வேலையை முடிக்குமாறு சொன்னார். ஆனால் அதனை ஏற்க மறுத்த நான், வேலையை விரைவாக முடித்துக்கொண்டு விடுதிக்கு திரும்பிவிடுகிறேன் எனக் கூறினேன்.
ஒரு கட்டத்தில் கையில் ஒயின் பாட்டிலை கையில் எடுத்த அவர், நீண்ட நேரம் அவருடன் தங்கி இருப்பதால், பெட் ரூமிற்கு சென்று கொஞ்சம் ஒயின் அருந்தி ரிலாக்ஸ் செய்துகொள் என்று கூறினார்.
அவர் இப்படி கூறியதும், நான் மிகவும் அசவுகரியமாக உணர்ந்தேன். மனதளவிலும் பாதிக்கப்பட்டேன். அப்போது என்னிடம் நெருங்கி வந்த அவர், " நீ ரொம்ப அழகா இருக்கிறாய்...!" எனக் கூறினார். உடனே நான் இருக்கையிலிருந்து எழுந்தேன். அவர் அப்படி கூறியதும், நான் அதற்கு பதிலளிக்கும் முன்னரே, எனது கையை பிடித்த கங்குலி, " உன்னிடம் நான் மயங்கிவிட்டேன் என்பது உனக்கு தெரியவில்லையா?... உண்மையிலேயே உன்னை நான் விரும்புகிறேன், ஐ லவ் யூ...!" என்றார்.
உடனே நான் அங்கிருந்து செல்ல முயற்சிக்கும்போது அவர் எனது கையில் முத்தமிட்டபடியே, அவர் என்னை நேசிப்பதாக மீண்டும் மீண்டும் கூறினார். எனது எதிர்ப்பையும் மீறி எனக்கு மிக நெருக்கமாக வந்து அமர்ந்து என் கையைப் பிடித்தார். அவருக்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டதற்காக எனக்கு நன்றி தெரிவித்தார்.
அவரது சில்மிஷ நடவடிக்கை வெறுக்கத்தக்கதாக இருந்ததால் நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். எனினும், அவர் தனது கையை எடுக்காமல் என்னை கட்டிப்பிடிக்க முயன்றார். ஒரு கட்டத்தில், என் அருகில் நின்றுகொண்டு என் தலையை தொட்டபடி, நீ அழகாக இருக்கிறாய் என்று கூறினார்.
நிலைமையை உணர்ந்த நான் உடனடியாக இருக்கையை விட்டு எழுந்தேன். ஆனால் அவர் என் தோளைப் பிடித்தபடி, "இந்த வயதான மனிதர் குடித்துவிட்டு ஏதோ உளறுகிறார் என்று நீ நினைக்கலாம். ஆனால் உண்மையில் நான் உன்னை விரும்புகிறேன்" எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, மேற்கு வங்க மனித உரிமைகள் கமிட்டித் தலைவராக உள்ள கங்குலியை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பா.ஜனதா, காங்கிரஸ் மத்திய அமைச்சர் கபில் சிபல், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் உட்பட அனைவரும் வற்புறுத்தி நிலையில், பெண் வழக்கறிஞரின் வாக்குமூலம் வெளியாகி உள்ளதால், நீதிபதி கங்குலிக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என கபில் சிபல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.