நீதிபதி ஜோசப் சீனியாரிட்டியை தட்டி பறித்த மத்திய அரசு! சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் அதிருப்தி
Recommended Video
டெல்லி: மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கொலீஜியம் அமைப்புகக்கும் நடுவேயான மோதல் போக்கு தொடர்ந்து வருவதாகவே தெரிகிறது. நீதிபதி கே.எம்.ஜோசப்பின் சீனியாரிட்டியை மத்திய அரசு குறைத்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் என்ற அமைப்பு நீதிபதிகளை தேர்வு செய்து அந்தப் பட்டியலை மத்திய அரசிடம் அனுப்பி ஒப்புதல் பெறுவது நீண்டகால நடைமுறையாக உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு, உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த கே.எம். ஜோசப் மற்றும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்தது.
திருப்பியனுப்பிய மத்திய அரசு
இவ்வாண்டு, ஜனவரி 10ஆம் தேதி இந்த பரிந்துரையை வழங்கப்பட்ட நிலையில். இந்து மல்ஹோத்ராவின் பெயரை மட்டும் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதில் உடன்பாடு இல்லை என கூறி அவர் பெயரை திருப்பி அனுப்பிவிட்டது.
ஆனால் உச்ச நீதிமன்ற கொலீஜியம் தனது முடிவில் உறுதியாக இருந்தது.
3வது பெயராக ஜோசப்
இரண்டாவது முறை அது கூடியபோதும் மீண்டும் ஜோசப்பின் பெயரை பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது. இதனால் வேறுவழியின்றி மத்திய அரசு ஜோசப்பின் பதவி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இரண்டாவது முறையாக பரிந்துரை அனுப்பியபோது, மூத்த நீதிபதிகள் என்ற அடிப்படையில் ஜோசப்பின் பெயரை முதலாதவாகவும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண் ஆகியோர் பெயர்களை அடுத்ததாகவும் பரிந்துரை செய்து அனுப்பி இருந்தது கொலீஜியம்.
சீனியாரிட்டி
ஆனால் இம்மாதம் 3ம் தேதி மத்திய அரசு, பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான அறிவிக்கையில், இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோர் பெயர்களுக்கு பிறகு ஜோசப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜோசப்பின் சீனியாரிட்டியை மத்திய அரசு குறைத்து விட்டதாக நீதிபதிகள் கொலீஜியத்தில் அதிருப்தி எழுந்துள்ளது. மற்ற இரு நீதிபதிகள் பெயர்களை பரிந்துரை செய்வதற்கு 6 மாதங்கள் முன்பே ஜோசப் பெயர் பரிந்துரைக்கப்பட்டதால், அவர்தான் சீனியர் என்பது கொலீஜியத்தின் கருத்து. எனவே, உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றஞ்சாட்டி, கொலீஜியம் நீதிபதிகள் இது தொடர்பாக தலைமை நீதிபதி ஜோஸ் தீபக் மிஸ்ராவை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளதாக உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னணி என்ன?
இதன்மூலம் கொலீஜியம் மற்றும் மத்திய அரசு இடையேயான மோதல் போக்கு இன்னும் தொடர்கிறது என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்த மத்திய அரசு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்தது உத்தரகாண்ட் மாநிலத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான ஜோசப். விசாரணை முடிவில், குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை தொடரச் செய்தார் ஜோசப். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் ஜோசப்பை மத்திய அரசு ஓரம்கட்ட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.