நீதிபதி ஜோசப்பின் பதவி உயர்வை ஏற்காதது ஏன்.. மத்திய அரசை சரமாரி கேள்வி கேட்கும் கபில் சிபல்
உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக வழங்கப்பட்ட பதவி உயர்வை ஏற்காதது ஏன் என்று கபில் சிபல் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
டெல்லி: உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக வழங்கப்பட்ட பதவி உயர்வை ஏற்காதது ஏன் என்று கபில் சிபல் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். பாஜகவிற்கு உதவியாக நடந்து கொள்ளும் நீதிபதியை மட்டும்தான் உச்ச நீதிமன்றத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். கொலிஜியம் அனுப்பிய நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் வழக்கம், ஆனால் இந்த முறை உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் பெயரை பரிந்துரையில் இருந்து நீக்கும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அவரது பெயர் மூப்பின் அடிப்படையில் இப்போது வர கூடாது என்று கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் இதற்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல் ''இது கொஞ்சம் கூட நியாயம் இல்லாதது. உச்ச நீதிமன்றம் முழுக்க பாஜகவின் ஆட்களை மட்டுமே நியமிக்க இருக்கிறார்களா? 410 உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இடம் காலியாக இருக்கிறது. எல்லா இடத்திலும் அவர்களுக்கு தேவையான ஆட்களை மட்டுமே நியமிக்க இருக்கிறார்களா. போதும், இதுவரை பாஜக நீதித்துறையை ஆட்டிப்படைத்ததே போதும்'' என்று கோபமாக பேசியுள்ளார்.
அதோடு ''பாஜக, ஜோசப்பை ஏற்றுக்கொள்ளாததற்கு மோசமான காரணம் சொல்லியுள்ளது. வயது குறைவு என்று. நீதிபதிகளின் பதவி உயர்வை கிரிமினல் குற்றம் அன்றி வேறு எதற்காகவும் மத்திய அரசுக்கு நிறுத்தி வைக்க உரிமை கிடையாது. இது எந்த விதியையும் கடைபிடிக்காமல் செய்யப்பட்டு இருக்கிறது'' என்றுள்ளார்.
முக்கியமாக ''கொலிஜியம் அனுப்பிய கடிதத்தில், இவர்தான் எல்லா தகுதியும் கொண்ட ஒரே நீதிபதி. தகுதி அடிப்படையில் இவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார். அப்படி இருக்கும் போது, எப்படி இவரது பெயரை மத்திய அரசு வேண்டாம் என்றது. இன்னும் நீதித்துறையை இவர்கள் எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்க இருக்கிறார்கள்'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக சில அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர். உத்தரகாண்டில் தேவையில்லாமல் குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்ட போது, அதை கண்டித்து மீண்டும் ஹரிஷ் ராவத் தலைமையிலான பெரும்பான்மை காங்கிரஸ் ஆட்சியை அமர வைத்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். அந்த கோபத்தில்தான் பாஜக இப்படி செயல்படுகிறது என்று கபில் சிபல் கூறியுள்ளார்.