சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சீராய்வு மனுத்தாக்கல்!!
சிறைத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கொல்கத்தா: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று முன்தினம் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடந்த ஜனவரி மாதம் கர்ணன் கடிதம் ஒன்றை எழுதினார். இதையடுத்து வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் கர்ணனுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதித்தது.
இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவரை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீசார் சென்னைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் 6 மாத சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அவரது வழக்கறிஞர் நீதிபதி கர்ணன் எங்கும் தப்பி ஓடவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் சென்னையில் தான் உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்திருப்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் கர்ணனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.