இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக... தலைமறைவான நிலையில் நீதிபதி கர்ணன் இன்றுடன் ஓய்வு
உச்சநீதிமன்றம் விதித்த சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க தலைமறைவான கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
டெல்லி: உச்சநீதிமன்றம் விதித்த 6 மாதம் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க தலைமறைவாக உள்ள கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்திய நீதித்துறை வரலாற்றில் நீதிபதி ஒருவர் தலைமறைவானதும் அப்படி தலைமறைவான நிலையிலேயே ஓய்வு பெறுவதும் இதுவே முதல் முறை.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் கர்ணன். அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறி பரபரப்பை கிளப்பினார் கர்ணன்.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குப் போனது. உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது. பின்னர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு கர்ணன் மாற்றப்பட்டார்.
கர்ணனுக்கு மனநல பரிசோதனை
இந்த அவதூறு விசாரணையின் போது நீதிபதி கர்ணனனுக்கு மனநல பரிசோதனைக்கு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணனோ உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்டு புதிய சர்ச்சையை கிளப்பினார்.
6 மாதம் சிறை
இதனால் கடும் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடனேயே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நீதிபதி கர்ணன் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவாக இருந்து கொண்டே தம் மீதான சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பலமுறை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை செய்தார்.
சிறை தண்டனை உறுதி
ஆனால் இந்த மனுக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து கர்ணனின் சிறை தண்டனையை ரத்து செய்தது. இந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
பணி ஓய்வு
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே ஒரு நீதிபதியே தலைமறைவானதும் இதுவே முதல் முறை... அப்படி தலைமறைவாகிவிட்ட நிலையிலேயே பணி ஓய்வு பெறுவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.