புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வந்த முதல் கோரிக்கை மனு யாருடையது தெரியுமா?
சிறையில் இருக்கும் நீதிபதி கர்ணன் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு அளித்துள்ளார்.
டெல்லி : உச்சநீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணன் கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். அப்போது அவர் மீது உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் 6 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. நாட்டிலேயே முதன்முறையாக நீதிபதி ஒருவருக்கே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழகம் வந்த நீதிபதி கர்ணன், அவரை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீஸ் சென்னை வரும் முன்னரே தலைமறைவானார். இதனிடையே கடந்த மாதம் 20ம் தேதி கோவை அருகே முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிடம் 4 முறை மனு செய்தார் கர்ணன். ஆனால் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதிக்கு பரோலுக்கும் தன் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
ஆனால் நீதிபதி கர்ணன் மீதான தண்டனை நீக்கப்படவில்லை. இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் அலுவலகத்தில் கர்ணன் தரப்பு வழக்கறிஞர் தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்ணணின் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இந்த மனுவை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.