ஜெ. அப்பீல் வழக்கு: நம்பிக்கையான 4 பேர் உதவியுடன் தீர்ப்பு தயாரித்த நீதிபதி குமாரசாமி
பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11 (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு வெளியாகிறது. ஹைகோர்ட் சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இந்த தீர்ப்பை வெளியிடுகிறார்.
இதனிடையே தீர்ப்பு தயாரிப்பு பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5ம் தேதி தொடங்கியது. 45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11ம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
பவானிசிங் சிக்கல்
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 மாதங்களுக்குள் மேல் முறையீட்டு விசாரணையை முடித்த நீதிபதி, மார்ச் 12ம் தேதி முதல் தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினார். இந்நிலையில் திமுக தரப்பின் மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், "பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது.
எனவே மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானி சிங் முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும்" என கடந்த ஏப்ரல் 27ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
தீர்ப்பை திருத்தினார்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நீதிபதி குமாரசாமி ஏப்ரல் 29ம் தேதி முதல் மேல்முறையீட்டில் மீண்டும் தீர்ப்பை திருத்தி எழுத ஆரம்பித்தார். திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 81 பக்க எழுத்துப் பூர்வ வாதம் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தாக்கல் செய்த 18 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தைக் கருத்தில் கொண்டு தீர்ப்பெழுத தொடங்கினார்.
நான்கு ஊழியர்கள்
சொத்து விவரங்களை கணக்கிட ஆடிட்டர் குழுவை நியமித்தார். தேவையான ஆவணங்களை எடுத்து தருவதற்காக நீதிமன்ற ஊழியர்கள் பிச்சமுத்து, காயத்ரி, தீபா ஆகியோரை தனது சேம்பரில் பணிக்கு அமர்த்தினார்.
தான் இறுதி செய்த தீர்ப்பு விபரங்களை தட்டச்சு செய்வதற்காக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த 4 அலுவலர்களை தன்னுடன் இருக்குமாறு உத்தரவிட்டார்.
கடும் கட்டுப்பாடு
தீர்ப்பு தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற அனை வரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. நீதிபதியின் சேம்பருக்கு பையோ, துண்டு காகிதங்களையோ கொண்டு வரக் கூடாது. கேமரா உள்ளிட்ட எந்த மின்சாதனங்களையும் கொண்டு வரக்கூடாது. அதே போல அங்கி ருந்து சிறு துண்டு தாளையும் வெளியே கொண்டு செல்லக் கூடாது.
மேலும் ஒருநாளைக்கு எத்தனை பக்கங்கள் தட்டச்சு செய்யப்படுகின்றன, எத்தனை வெள்ளைத் தாள்கள் படி எடுக்கப்படுகின்றன உள்ளிட்ட சிறிய விபரங்களைக்கூட பதிவு செய்ய வேண்டும் என உத்தரவை பிறப்பித்திருந்தார்.
ரகசியம் காத்த குமாரசாமி
இதன்மூலம் தீர்ப்பு விவரம் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதில் குமாரசாமி மிகவும் எச்சரிக்கையாக இருந்தார் என்கிறார்கள், கோர்ட் வட்டாரத்தில். ஆரம்பம் முதலே, விசாரணையில் பாரபட்சம் காட்டாமல், மிகவும் ஸ்ட்ரிக்டாக கொண்டு சென்றவர் குமாரசாமி. எனவே, அவர் திங்கள்கிழமை வழங்கப்போகும் தீர்ப்பை நாடே ஆவலோடு எதிர்பார்த்துள்ளது.