ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி செய்துள்ள காரியத்தை பாருங்க... ஆச்சரியம்தான் போங்க!
டெல்லி: கேரளாவுக்காக நிவாரண பொருட்கள் உச்சநீதிமன்ற வளாகத்தில் சேகரிக்கப்பட்டது நீதிபதி குரியன் ஜோசப் தன்னார்வலர்களுடன் சேர்ந்து உதவி செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
கேரளத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் கடவுளின் தாய் வீடான அந்த மாநிலமே வெள்ளக்காடானது. அந்த மாநிலத்தில் 19,512 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டது.
மக்கள் தங்கள் உடைமைகளையும் வீட்டையும் இழந்தனர். தற்போது அடுத்த வேளை உணவுக்காக ராணுவ ஹெலிகாப்டர்களை நோக்கி காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது.
நிதியுதவி
கேரள மக்களுக்காக மற்ற மாநிலத்து மக்கள் தாராளமாக நிதியுதவியை செய்து மாநிலம் பழைய நிலைக்கு திரும்ப உதவி புரியுங்கள் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒருங்கிணைப்பு
இதையடுத்து கேரள மாநிலத்துக்கு மற்ற மாநில அரசுகளும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகிறது. பல்வேறு மக்களிடம் இருந்து நிவாரண பொருட்களை பெற்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைத்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
டெல்லி மக்களும்
அது போல் டெல்லியில் உள்ள மக்களும் கேரளாவுக்காக நேற்று நிவாரண பொருட்களை சேகரித்தனர். மேலும் சில வழக்கறிஞர்கள் மூலம் நிவாரண பொருட்களை சேகரித்து அதை உரிய முறையில் பேக்கிங் செய்ய தன்னார்வலர்கள் தேவை என்று சமூகவலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்தனர்.
என்ன நிவாரணம்
இதையடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தில் 7 லாரிகள் நிறைய நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அதில் பால்புட்டிகள், துணிகள், செருப்புகள், பாத்திரங்கள், சானிட்டரி நாப்கின்கள், தண்ணீர் பாட்டில்கள், முக்கியமான மருந்துகள், அரிசி, பருப்பு மற்றும் பிஸ்கெட் ஆகியன இருந்தன.
பேக்கிங் செய்தார்
அப்போது அங்கு முதல் ஆளாக வந்தார் நீதிபதி குரியன் ஜோசப். இவர் தன்னார்வலர்களுடன் சேர்ந்து அட்டைபெட்டிகளுக்கு லேபிள் ஒட்டியது மற்றவர்களுக்கு ஊக்கமளித்தன. இதைக் கண்ட மற்றவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர் நள்ளிரவு வரை இந்த பணிகளை மேற்கொண்டார். குரியன் ஜோசப்புக்கு எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காலாடிதான் சொந்த ஊராகும் என்பது குறிப்பிடத்தக்கது.