காவிரி வன்முறையை தடுக்க மனு.. விசாரிக்காமல் விலகிய நீதிபதி நாகப்பன்.. காரணம் தெரியுமா?
டெல்லி: கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தலையிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில், விசாரணை பெஞ்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி நாகப்பன் வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார்.
காவிரி விவகாரத்திற்காக கடந்த திங்கள்கிழமை பெங்களூரில் கன்னட அமைப்பிர் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. தாமதமாக விழித்துக் கொண்ட காவல்துறை 16 காவல் சரகங்களில் ஊரடங்கு உத்தரவையும், மொத்த பெங்களூருக்கும் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது.
காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே கன்னட அமைப்புகள் மிக மோசமான வன்முறையில் இறங்கியுள்ளன. இதனால் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கன்னியாகுமரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவகுமார் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான விசாரணை பெஞ்ச் நீதிபதிகளில் நாகப்பனும் ஒருவர். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். எனவே இந்த வழக்கை தான் விசாரிப்பது சர்ச்சையை ஏற்படுத்தும் என நினைத்து, விசாரணை பெஞ்சிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார். எனவே உரிய பெஞ்சிடம் இந்த வழக்கு வழங்கப்படும் என தெரிகிறது.