உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூர் நியமனம்!
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூரை நியமிக்க, தற்போதைய தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து பரிந்துரைத்ததை தொடர்ந்து, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள, கர்நாடகாவை சேர்ந்த, ஹெச்.எல்.தத்து பதவிக்காலம் முடிவடைய உள்ளதை தொடர்ந்து வரும் டிசம்பர், 2ம் தேதி புதிய தலைமை நீதிபதியை நியமிக்க வேண்டியது அவசியம்.
எனவே புதிய தலைமை நீதிபதியாக, தத்துவிற்கு அடுத்த சீனியாரிட்டி கொண்ட திராத் சிங் தாக்கூரை பரிந்துரைத்தார், தத்து. இந்த பரிந்துரை, மத்திய சட்ட துறை அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, பிறகு பிரதமர் அலுவலகம் பச்சைக்கொடி காண்பித்த பிறகு, குடியரசு தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதித்துறை நியமன கமிஷன் சட்டத்தை, உச்சநீதிமன்றம் சமீபத்தில், டிஸ்மிஸ் செய்த பிறகு, வழக்கமான கொலீஜியம் முறை அடிப்படையில், நடைபெற்றுள்ள மிகப்பெரிய நியமனம் இதுதான்.
இந்திய உச்சநீதிமன்றத்தின் 43வது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள தாக்கூரின் பதவிக்காலம், 2017 ஜனவரி 4ம் தேதிவரையுள்ளது.
1952ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி, புகழ் பெற்ற வழக்கறிஞரான டி.டி.தாக்கூரின் மகனாக பிறந்தவர் டி.எஸ்.தாக்கூர். டி.டி.தாக்கூர் பிற்காலத்தில், காஷ்மீர் ஹைகோர்ட் நீதிபதியாகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
டி.எஸ்.தாக்கூர், ஜம்மு காஷ்மீர் ஹைகோர்ட்டில்தான் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். பிறகு நீதிபதியாக பணி உயர்வு பெற்று, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய ஹைகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றினார். 2008ம் ஆண்டில், டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதியானார்.
அதேபோல, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஹைகோர்ட்டிலும் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தாக்கூர். 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் தாக்கூர்.