பத்மபூஷண் விருதை பெற நீதிபதி வர்மா குடும்பத்தினர் மறுப்பு... ஜனாதிபதிக்கு கடிதம்
டெல்லி: விருதுகள் பெறுவது தனது கணவருக்கு பிடிக்காத செயல் எனக் கூறி மத்திய அரசு கொடுக்கவுள்ள பத்ம பூஷண் விருதை மறுத்து, குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார் மறைந்த நீதிபதி வர்மாவின் மனைவி புஷ்பா.
நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் பெறுபவர்கள் பட்டியலை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது. அதில் மறைந்த நீதிபதி வர்மாவுக்கு மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தின் போது, நீதிபதி வர்மாவிடம் தான் பாலியல் குற்றங்களுக்கு எதிரான வலுவான சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை அரசு ஒப்படைத்திருந்தது. மிக குறுகிய காலத்தில், 630 பக்க சட்டத்தை உருவாக்கி கொடுத்தார் நீதிபதி வர்மா. அதனைக் கருத்தில் கொண்டே, நீதிபதி வர்மாவைக் கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு பத்ம பூஷண் விருதை அறிவித்தது.
ஆனால், தற்போது நீதிபதி வர்மா குடும்பத்தினர் பத்ம பூஷண் விருதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நீதிபதி வர்மாவின் மனைவி புஷ்பா எழுதியுள்ள கடிதத்தில், ‘என் கணவர் வர்மா எந்த பரிசையும் விருதையும் ஏற்காதவர். சிறந்த நீதிபதி என்ற கவுரவத்தையே விரும்பினார். எனவே அவர் விருப்பத்துக்கு மாறாக அரசு கொடுக்கும் பத்ம பூஷண் விருதை ஏற்க இயலாது'' எனத் தெரிவித்துள்ளார்.