ரகசிய இடத்தில் விடுவிக்கப்பட்ட "நிர்பயா" குற்றவாளி.. தையல் கடை வைக்க மத்திய அரசு ரூ. 10,000 உதவி!
டெல்லி: ஒட்டுமொத்த மக்களும் கடும் அதிருப்தியில் இருக்க, நேற்று நிர்பயா பலாத்கார வழக்கின் இளம் குற்றவாளி யாருக்கும் தெரியாத வகையில் ரகசிய இடத்தில் கொண்டு போய் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் அவர் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் இருப்பார். அதேசமயம், அவரது சுதந்திரத்திற்கு இடையூறு இருக்காதாம்.
அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரது விடுவிப்பையும், அவர் எங்கு கொண்டு போய் விடப்பட்டுள்ளார் என்பதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. தற்போது அவருக்குத் தையல் கடை வைத்துக் கொள்வதற்காக மத்திய அரசு ரூ. 10,000 நிதியுதவியையும் அளித்துள்ளதாம்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து இளம் பிசியோதெரப்பி மாணவி நிர்பயா என்கிற ஜோதி சிங் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தக் கொடும் செயலில் ஈடுபட்டது 6 பேர். அவர்களில் இந்த இளம் குற்றவாளிக்கு அப்போது வயது 18. அந்த ஆறு பேரிலேயே இவர்தான் மிகக் கொடூரமான முறையில் மாணவியிடம் நடந்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் வயது 18 தான் என்பதால் சட்டப்படி இவரை இளம் சிறார் குற்றவாளிகளுக்கான கோர்ட்டில் தனியாக விசாரித்தனர். விசாரணையின் இறுதியில் என்ன குற்றம் செய்தாலும் அதிகபட்சம் 3 ஆண்டுதான் தண்டனை என்பதால் இவரையும் 3 ஆண்டுகள் சிறார் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர். தற்போது இந்த நபரின் 3 ஆண்டு கால தண்டனை முடிந்து விட்டதால் விடுதலை செய்துள்ளனர். இப்போது இவருக்கு வயது 21 ஆகிறது.
இந்த விடுதலை மக்களிடையே பெரும் குமுறலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இவரைத் தொடர்ந்து காப்பகத்தில் வைக்க முடியாது என்று சட்டம் கூறுவதாக டெல்லி உயர்நீதிமன்றம் கைவிரித்து விட்டதால் நேற்று இந்த நபரை யாருக்கும் தெரியாமல் ரகசிய இடத்தில் விடுவித்துள்ளனர்.
இவர் இனி சுதந்திரமாக நடமாட முடியும். இருப்பினும் சட்டத்திற்குட்பட்டு அவர் தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குக் கண்காணிக்கப்படுவார். மேலும் அவருக்கு தையல் கடை வைத்துப் பிழைத்துக் கொள்ள வசதியாக ரூ. 10,000 நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது.