அதிகரித்து வரும் சிறார் குற்றவாளிகள்... சட்டத்தின் "ஓட்டை"யில் புகுந்து தப்பிக்கும் அவலம்
டெல்லி: ஆண்டுக்கு ஆண்டு நாட்டில் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள விபரங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற சிறார் குற்றவாளி, இவ்வார இறுதியில் விடுதலை செய்யப்பட இருக்கிறார்.
ஆனால், இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறார் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன. வயதைக் காரணம் காட்டி கடும் குற்றம் செய்தவருக்கு விடுதலை வழங்குவதா என்பது அவர்களது வாதம்.
அதிகரிக்கும் சிறார் குற்றவாளிகள்...
இந்நிலையில், ஆண்டுதோறும் நாட்டில் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்தியாஸ்பெண்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிக வழக்குகள்...
அதன்படி, கடந்த 2010ம் ஆண்டு சிறார் குற்றவாளிகள் மீது 22,740 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அது 2013ம் ஆண்டு 33,526 ஆக உயர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் சிறார்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள் 47 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சட்டத்தில் ஓட்டை...
இந்த புள்ளி விவரங்கள் சிறார் குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி தப்பி வருவதையும், நமது நாட்டுச் சட்டங்கள் சிறார் குற்றவாளிகளின் பெருக்கத்தைத் தடுக்க முடியாமல் இருப்பதையும் நீரூபிப்பதாக உள்ளது.
3 ஆண்டுகள் மட்டுமே...
‘இதுகுறித்து நிச்சயம் அரசு பரிவுடன் கவனிக்கும். இது கவலைக்குரியது' என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் கூட கூறியிருக்கிறார். அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே தற்போது சிறார் குற்றவாளிகள் சிறையில் காலத்தைக் கழிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த குற்றச் செயல்கள்...
நாட்டில் இளம் குற்றவாளிகளால் நடக்கும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், மொத்தக் குற்றச் செயல்களின் அளவானது கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 முதல் 1.2 சதவீதமாக இருந்தது.
குறைந்துள்ளது...
மேலும கடந்த ஐந்து ஆண்டுகளில் திரும்பத் திரும்ப குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கையும் 12.1 சதவீதத்திலிரு்து 5.4 சதவீதமாக குறைந்துள்ளது.
கோரிக்கை...
நிர்பயா வழக்குக்குப் பி்ன்னர் இளம் சிறார் சட்டத்தில் இளம் குற்றவாளிகளின் வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் இரண்டரை வயதி சிறுமியை 16 மற்றும் 17 வயதுடைய சிறார்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் வயதைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
சட்டத்திருத்த மசோதா...
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இளம் சிறார் குற்றவாளிகள் சட்டத் திருத்த மசோதா 2014 நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது ராஜ்யசபாவில் தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இன்னும் அங்கு நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.