புதிய பாதையை திறந்துள்ள சிறார் குற்றவாளிகள் வயது வரம்பு குறைப்பு சட்டம்
டெல்லி: கொலை, வன்புணர்வு போன்ற கொடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வயது வந்தோராகக் கருதி, தண்டனை அளிக்க வகை செய்யும் சிறார் நீதி (குழந்தைகள் மீதான அக்கறை மற்றும் பாதுகாப்பு) சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று விவாதத்துக்குப் பின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
அதேநேரம், எந்தவொரு சிறுவரும் நேரடியாக சிறைக்கு அனுப்பப்பட மாட்டார்கள். நிபுணர்களையும், உளவியல் வல்லுநர்களையும் கொண்ட நீதி அமர்வு, அந்தக் குற்றம் குழந்தை மனநிலையில் செய்யப்பட்டதா அல்லது முதிர்ச்சி பெற்ற மனநிலையில் செய்யப்பட்டதா என்பதைத் தீர்மானிக்கும்.
நீதிமன்றம், அவர்களை வயது வந்தோருக்கான சிறையில் அடைக்க உத்தரவிட்டாலும், மேல்முறையீடு செய்ய அதிகாரம் உள்ளது. சிறார் குற்றவாளி, 21 வயது வரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுமதிக்கப்படுவார். அதன்பிறகு மறுஆய்வு செய்யப்படும்.
16 வயது நிரம்பியிருந்தாலும், குற்றவாளி சிறுவனா இல்லையா என்பது சிறார் நீதி வாரியத்தால் தீர்மானிக்கப்படும் என்பதால் இது ஒரு நுட்பமான சட்டமாகும். பெருகிவரும் தகவல் தொழில்நுட்ப காலத்தில் சிறுவர்கள் விரைவில் முதிர்ச்சியடைய வாய்ப்புள்ளது. எனவே அதை கருத்தில்கொண்டு, உருவாக்கப்பட்டுள்ள, இந்த சட்டம் ஒரு புதிய பாதையை திறந்துவிட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.