அப்பீல் வழக்கு: அன்பழகன் தரப்பு வாதத்தை முன்வைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி- ஜெ. கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி: அப்பீல் வழக்கில் திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பு வாதத்தை அனுமதிக்கக் கூடாது என்ற ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் நாளைய விசாரணையில் அன்பழகன் சார்பாக மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா தமது வாதத்தை முன்வைக்க உள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசும் திமுக பொதுச்செயலர் அன்பழகனும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இருவருமே மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருப்பதை நிராகரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏற்கவில்லை. அத்துடன் கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் தங்களது இறுதிவாதங்களை முன்வைக்கவும் அனுமதித்தனர். இருவரும் இறுதிவாதத்தை நிறைவு செய்தனர்.
இவ்வழக்கின் நேற்றைய விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் மீண்டும் நீதிபதிகளிடம் அன்பழகன் தரப்பு வாதத்தை அனுமதிக்க கூடாது; அன்பழகன் தரப்புக்கு அப்பீல் செய்யவே உரிமை இல்லை எனக் கூறினார். ஆனால் இதையும் இன்று நீதிபதிகள் நிராகரித்தனர்.
இதையடுத்து க. அன்பழகன் சார்பாக மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா நாளை தம்முடைய வாதங்களை முன்வைக்க உள்ளார். ஏற்கனே அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த மனுக்களில், இவ்வழக்கின் விசாரணையில் சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கான வருமானம் இதுதான் என்பதை நிரூபிக்க ஜெயலலிதா தவறிவிட்டார். 1988-90ஆம் ஆண்டு காலத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்ஜிஆர், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள்தான் ஜெயலலிதா வசம் இருந்தன. இந்த நிறுவனங்கள் மூலம் எந்த ஒரு வருமானமும் பெறப்படவும் இல்லை.
13.05.1988 முதல் 27.1.1989 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த ஜெயலலிதா, ரூ 9,12,129-க்கு 4 கார்களை வாங்கினார்; அதேபோல் 13.2.1989-ல் ரூ1,04,000க்கு ஜீப் ஒன்றை வாங்கினார். ஆனால் எம்.எல்.ஏ.வாக அவர் பதவிக்க தொடங்கியது முதல் அவரது வருமானத்துக்கும் வாங்கிக் குவித்த சொத்துகளுக்கும் சம்பந்தமே இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்து எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவரங்களை அந்தி அர்ஜூனா நாளை தம்முடைய வாதத்தில் சுட்டிக்காட்டுவார் என தெரிகிறது.