கே.ஆர்.விஜயா கணவர் உடல் கோழிக்கோட்டில் இன்று தகனம்
திருவனந்தபுரம்: நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதத்தின் உடல் தகனம், இன்று கோழிக்கோட்டில் நடைபெறுகிறது.
கற்பகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் கே.ஆர்.விஜயா. இவர் தொழிலதிபர் வேலாயுதம் என்பவரை 1966 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலாயுதம், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்.
அவரது உடல் கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, இன்று அவரது உடல் தகனம் கோழிக்கோட்டில் நடைபெறுகிறது.
வேலாயுதம் தமிழ் சினிமாவில் ராமன் எத்தனை ராமனடி, தீர்க்க சுமங்கலி உட்பட சுமார் 80க்கும் அதிகமான படங்களைத் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.