இஸ்ரோ தலைவராக தமிழகத்தின் கே.சிவன் நியமனம்
டெல்லி: இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக சிவன் இருந்து வருகிறார். தற்போது இஸ்ரோ தலைவராக இருந்து வருபவர் கிரண் குமார். அவர் ஓய்வு பெறுவதையடுத்து அந்த இடத்திற்கு சிவன் வருகிறார்.
மத்திய அமைச்சரவையின் நியமனக் கமிட்டி சிவன் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சிவன் நியமனத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு சிவன் பதவி வகிப்பார்.
சென்னை எம்ஐடியில் ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங் படிப்பை 1980ம் ஆண்டு படித்தவர் சிவன். பெங்களூர் ஐஐஎஸ்சியில் ஏரோஸ்பேஸ் என்ஜீனியரிங்கில் முதுநிலை படிப்பை முடித்தார். அதன் பின்னர் 2006ம் ஆண்டு மும்பையில் உள்ள ஐஐடியில் ஏரோஸ்பேஸ் என்ஜீனியரிங்கில் பிஎச்டி ஆய்வையும் முடித்தார்.
இஸ்ரோவில் 1982ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். முதல் பணியாக அவர் ஈடுபட்டது பிஎஸ்எல்வி திட்டமாகும். ஒவ்வொரு பிஎஸ்எல்வி திட்டத்திலும் இவர் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளார்.