தெலுங்கானா: ரயில் விபத்தில் சிக்கிய ஓட்டுநர் 8 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்பு
Recommended Video
கச்சிகுடா: ஹைதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிராக வந்த இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இன்ஜினில் சிக்கிய ஓட்டுநர் 8 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
கச்சிகுடா ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த தண்டவாளத்தில் புறநகர் மின்சார ரயிலும் வந்தது. இந்த இரு ரயில்களும் சிக்னல் கோளாறால் நேருக்கு நேராக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. அப்பெட்டிகளில் இருந்த 30 பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் புறநகர் ரயிலின் ஓட்டுநர் என்ஜினில் சிக்கினார்.
அவரை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சுமார் 8 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் ஓட்டுநர் சந்திரசேகர் மீட்கப்பட்டார்.
அவர் உடனடியாக உஸ்மானியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.