ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக மேலும் 35 தமிழர்கள் கைது
ஆந்திர மாநிலம் கடப்பா வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 214 தமிழர்கள் ஆந்திரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 179 பேரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் கடப்பாவிலுள்ள பத்வேல் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியாக மேலும் 35 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் இதுவரை செம்மரம் கடத்தியாக தமிழகத்தைச் சேர்ந்த 214 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 20க்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திர வனத்துறையினர் சுட்டுக் கொலை செய்தனர். இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.