அமைதிக்கான நோபல் பரிசு திருட்டு.. கைலாஷ் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை.. டெல்லியில் பரபரப்பு
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் வீடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர் பெற்ற நோபல் பரிசையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
டெல்லி: 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் வீடு கொள்ளையடுக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பாகிஸ்தான் பெண் கல்விக்கான போராளியான மலாலாவுடன் இணைந்து பெற்றவர் கைலாஷ் சத்யார்த்தி. சமூக செயற்பாட்டாளரான இவர் டெல்லியில் வசித்து வருகிறார்.
63 வயதான கைலாஷ் தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில் அவரது வீடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்க வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், நோபல் பரிசு மற்றும் மதிப்பு மிக்க, வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு விருதுகளையும், பரிசுப் பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர்.
இதுகுறித்து, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைலாஷ் சத்யார்த்தியின் சமூக சேவையால் சுமார் 80 ஆயிரம் சிறுவர்கள் பலன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.