கர்நாடகாவில் அமைச்சரவை உருவாக்கத்துக்குப் பின் ம.பி.யில் கச்சேரி...கைலாஷ் விஜயவர்ஜியா
ஜெய்ப்பூர்: கர்நாடகாவில் பாஜக அரசின் அமைச்சரவை உருவாக்கத்துக்குப் பின்னர் மத்திய பிரதேசத்தில் தங்களது கட்சி புதிய ஆபரேஷனை தொடங்கும் என்று பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா எச்சரித்துள்ளார்.
கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டு பாஜகவின் எடியூரப்பா முதல்வராகி உள்ளார். சட்டசபையில் எடியூரப்பா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார்.
இதனிடையே பாஜகவின் அடுத்த ஆட்டத்தை மத்திய பிரதேசத்தில் தொடங்கியுள்ளது. பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு உடனுக்குடன் காங்கிரஸ் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் பாஜக அமைச்சரவை அமைந்த பின்னர் எங்களுடைய மத்திய பிரதேச ஆபரேஷன் தொடங்கும். அக்கட்சி தலைமை மீது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை.
அவர்களைப் பொறுத்தவரை பிரதமர் மோடி மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பிளவுபட்டு இருக்கிறது. அங்கு காங்கிரஸ் அரசு கவிழும்.
இவ்வாறு கைலாஷ் விஜயவர்ஜியா கூறினார்.