தீராத மர்மம்: கலாபவன் மணி உடல் மறு பிரேதப் பரிசோதனை!
திருச்சூர்: மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சாவில் மர்மம் நீடிப்பதால் அவரது உடல் உறுப்புகளை ஹைதராபாதில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி மறுபரிசோதனை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
பிரபல நடிகர் கலாபவன் மணி தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் பின்னர் அவரது சாவில் பெரும் மர்மம் உள்ளதாகவும், இதனை விசாரிக்குமாறும் கலாபவன் மணியின் சகோதரர் மற்றும் மனைவி புகார் கூறினர். இதன் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், கலாபவன் மணியின் உடலில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவில் பூச்சி மருந்து எப்படி கலந்தது... அல்லது மது அருந்திக் கொண்டிருந்த கலாபவன் மணி பூச்சி மருந்தைக் குடிக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் விசாரித்த போலீஸ், மது விருந்தன்று அவருடன் இருந்த அத்தனை பேரையும் விசாரித்துவிட்டது. எல்லோரும் ஒருமித்த குரலில் எங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர்.
கலாபவன் மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தை விடுவிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் கலாபவன் மணியின் மனைவி நிம்மி கேரள உள்துறை மந்திரி ரமேஷ்சென்னிதலாவுக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார் அதில் தனது கணவர் மரணத்தில் உள்ள மர்மத்தை விரிவாக விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எனவே கலாபவன் மணியின் முக்கிய உடல் உறுப்புகளை மீண்டும் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் ஹைதராபாத்தில் உள்ள மத்திய பரிசோதனை கூடத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படுகிறது.