கல்லீரல் பிரச்சினையும், குடிப் பழக்கமுமே கலாபவன் மணி மரணத்திற்குக் காரணம்- கேரள போலீஸ்
கொச்சி: நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கு, அவருக்கு நீண்ட காலமாக இருந்து வந்த கல்லீரப் பிரச்சினையும், மதுப் பழக்கமுமே காரணமாக இருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதாக கேரள போலீஸார் கூறியுள்ளனர்.
அவரது மரணம் இயற்கையானதாக இருக்க முடியுமே தவிர வேறு சந்தேகப்படும்படியாக எதுவும் தெரியவில்லை என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
முன்னதாக கலாபவன் மணியின் ரத்தத்தில் விஷம் கலந்திருப்பதாக டாக்டர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் கலாபவன் மணியின் உடலில் நடத்தப்பட்ட முதல் பிரேதப் பரிசோதனை மற்றும் அவரது சகோதரர் புகார் கூறிய பின்னர் நடத்தப்பட்ட விசாரணை ஆகியவற்றுக்குப் பின்னர் இன்று இப்படிக் கூறியுள்ளனர் போலீஸார்.
ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான சாலக்குடியில் உள்ள தனது கெஸ்ட் ஹவுஸில் உயிரிழந்தார் கலாபவன் மணி. அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. அவருக்கு கல்லீரல் பிரச்சினையும் இருந்து வந்தது. மதுப் பழக்கமும் அவருக்கு உண்டு.
இதற்கிடையே கலாபவன் மணி உடலில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி அவரது உடலில் அதிக அளவிலான விஷப் பொருட்கள் எதுவும் கலந்திருக்கவில்லை. அவரது கல்லீரல் பிரச்சினை முற்றி அவருக்கு மரணம் சம்பவித்திருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக அவரது கல்லீரல் பலவீனமடைந்து வந்துள்ளது. கிட்டத்தட்ட அது செயலிழந்த நிலைக்குப் போய் விட்டது. அவருக்கு உடலில் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருதயக் கோளாறும் அவருக்கு இல்லை.
நான்கு மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், மது அருந்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் உயிருக்கு ஆபதது என்று கடுமையாக எச்சரித்துள்ளனர்.
ஆனால் டாக்டர்கள் எச்சரிக்கையை கலாபவன் மணி கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து குடித்துள்ளார். இதுவே தற்போது அவருக்கு எமனாகி விட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவர்களின் கூற்று, கலாபவன் மணியின் உடல்நிலை, அவரது குடிப்பழக்கம், பிரேதப் பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றை வைத்து இது இயற்கையான மரணமாக இருக்கலாம் என்றமுடிவுக்கு போலீஸார் வந்துள்ளனர். இருப்பினும் அவரது உடல்உள் உறுப்புகளைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதில்கிடைக்கும் முடிவை வைத்து ஒரு அனுமானத்திற்கு வர போலீஸார் திட்டமிட்டுள்ளனராம்.