தொடரும் மர்மம்... கலாபவன் மணி நண்பர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை!
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் மரணம் தொடர்பாக அவரது நண்பர்கள் சிலருக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த மார்ச் மாதம் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார். தொடர்ந்து நடந்த உடற்கூறு பரிசோதனையில் அவரது உடலில் பூச்சி கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை விஷம் கொடுத்து யாராவது கொன்றிருக்கலாமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
இயற்கை மரணம்...?
அவருக்கு ஏற்கனவே கல்லீரல் பாதிப்பு இருந்தது. டாக்டர்கள் எச்சரிக்கையும் மீறி அவர் மது அருந்தியுள்ளார். இதனால் இயற்கை மரணமாகவும் இருக்கலாம் என்றும் கருதப்பட்டது.
நண்பர்கள் மீது புகார்...
ஆனால், கலாபவன் மணியின் மரணத்திற்கு அவரது நண்பர்கள் காரணம் என அவரது சகோதரர் குற்றம் சாட்டினார். இதற்கிடையே கலாபவன் மணியின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த கோரி, கேரள மனித உரிமை ஆணையத்தில் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
ஆனால், கலாபவன் மணியின் மரணத்திற்கு அவரது நண்பர்கள் காரணம் என அவரது சகோதரர் குற்றம் சாட்டினார். இதற்கிடையே கலாபவன் மணியின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த கோரி, கேரள மனித உரிமை ஆணையத்தில் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேரள டிஜிபிக்கு, ேகரள மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து டிஜிபி லோக்நாத் பெகரா, மனித உரிமை ஆணையத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.
தொடரும் மர்மம்...
அதில், "நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து இதுவரை 290க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மரணத்திற்கான உண்மையான காரணத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
உண்மை கண்டறியும் சோதனை...
இதனால் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கலாபவன் மணியின் 6 நண்பர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.