கலாபவன் மணியின் மரணத்தில் தொடர் மர்மம்: உள்துறை அமைச்சருக்கு மனைவி கடிதம்
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி அவரது மனைவி நிம்மி கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நடிகர் கலாபவன் மணி கடந்த 6ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் இழந்தார். அவர் கடைசியாக அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது சோதனையில் தெரிய வந்தது.
மணிக்கு கோடிக் கணக்கில் சொத்து இருப்பதால் அதை அபகரிக்க யாராவது அவரை திட்டமிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மணியின் மனைவி நிம்மி மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
எனது கணவர் மணியின் மரணம் மர்மமாக உள்ளது. அதனால் இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மணியின் மரணத்தில் சில நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக நிம்மியும், மணியின் சகோதரர் ராமகிருஷ்ணனும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.